அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரக
அதிகாரி தேவ்யானி கோப்ராக்டே விசா மோசடி உள்ளிட்ட மோசடிகளில் ஈடுபட்டதாக
கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்திய அரசு டெல்லியில் உள்ள
அமெரிக்க தூதரக வாயிலில் இருந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை நீக்குவது, அமெரிக்க
அதிகாரிகளுக்கு வழங்கி வந்த சிறப்பு வசதிகளை ரத்து செய்வது உள்ளிட்ட
பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இதன் பின்னணி என்ன ?
தேவ்யானி மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்தவர். மருத்துவப் படிப்பு முடித்து விட்டு, சிவில் சர்வீசஸ் தேர்வுகள் எழுதி, ஐஎஃப்எஸ் அதிகாரியாக 1999ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது தந்தை ஒரு ஐஏஎஸ் அதிகாரி.
ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் பணிகளைப் போலவே, ஐஎஃப்எஸ் பணியிலும் அரசியல்
செல்வாக்கு மற்றும் லாபிகள் செய்யத் தெரிந்தால்தான் நல்ல பதவிகளைப் பெற
முடியும். லாபி செய்யத் தெரிந்தால், ஐரோப்பா மற்றும் அமெரிக்காவிலேயே
பணியாற்றலாம். லாபி செய்யத் தெரியாவிட்டால், உகாண்டா, டிம்பக்டூ போன்ற
மொக்கை நாடுகளில் நியமிப்பார்கள். தேவ்யானி, இதற்கு முன்னர், பாகிஸ்தான்,
இத்தாலி மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளில் பணியாற்றியவர். தற்போது
அமெரிக்காவில் இந்திய தூதரகத்தில் பணியாற்றி வருகிறார்
நடந்த சம்பவம் என்ன ? சங்கீதா ரிச்சர்ட் என்பவரை வீட்டு வேலை
செய்வதற்காக நியூயார்க் அழைத்துச் செல்கிறார். நவம்பர் 2012ல், சங்கீதா,
தேவயானி வீட்டில் நியூயார்க்கில் பணிபுரிகிறார். பேசிய ஊதியத்தை விட
சங்கீதாவுக்கு குறைவான தொகையை தருகிறார் தேவயானி. மார்ச் 2013ல் அதிக
ஊதியம் கேட்பதாகவும், வேறு வேலைக்கு செல்ல வேண்டும் என்றும் தேவயானியின்
பணிப்பெண் சங்கீதா மீது டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கிறார்
தேவயானி.
ஜுன் 23 அன்று தேவயானியின் வீட்டை விட்டு சங்கீதா வெளியேறுகிறார்.
வெளியேறிய சங்கீதா நியூயார்க்கில் உள்ள ஒரு வழக்கறிஞரை சந்திக்கிறார்.
இந்த விபரம் தேவயானிக்கு தெரிந்ததும், இந்தியாவில் உள்ள சங்கீதாவின் கணவர்
மற்றும் குழந்தையை காவல்துறையினர் கைது செய்கின்றனர். தேவயானியின் தந்தை
ஒரு ஐஏஎஸ் அதிகாரி என்பதால், வெகு எளிதாக அவர்களால் சங்கீதாவை மிரட்ட
முடிகிறது. தன் கணவரும், குழந்தையும் கைது செய்யப்பட்ட விவகாரம்
தெரிந்ததும், சங்கீதா பயந்து போகிறார். வழக்கறிஞர் அலுவலகத்துக்கு
வெளியிலேயே இந்திய தூதரக அதிகாரிகள், (ரா உளவுப் படை அதிகாரிகள்)
காத்திருக்கின்றனர். அமெரிக்க காவல்துறையினருக்கு தகவல் அனுப்பப்பட்டு
அவர்கள் வந்த பிறகே, சங்கீதா பத்திரமாக அனுப்பப்பட்டிருக்கிறார். இந்திய
அரசு உடனடியாக சங்கீதாவின் பாஸ்போர்ட்டை ரத்து செய்கிறது. காணாமல்
போனதாக, சங்கீதாவை கண்டுபிடித்துத் தருமாறு அமெரிக்க அரசாங்கத்தை இந்திய
அரசு கேட்டு கொள்கிறது.
டெல்லி உயர்நீதிமன்றத்தைத் தவிர வேறு எங்கும் தேவயானி மீது வழக்கு
தொடுக்கக் கூடாது என்றும் ஒரு தடையுத்தரவு பெறுகிறார். அந்த வழக்கில்
தீர்ப்பளித்த நீதிபதி ஜெயந்த் நாத், சங்கீதா மற்றும் தேவயானி ஆகிய இருவரும்
இந்தியாவுக்காக பணியாற்றவதால், அது தொடர்பான எந்த வழக்காக இருந்தாலும்,
இந்தியாவில்தான் தொடர முடியும் என்று ஒரு தடை உத்தரவு பிறப்பிக்கறார்.
புதுதில்லி வடக்கு காவல் நிலையத்தில் சங்கீதா மீது மிரட்டுதல், நம்பிக்கை
மோசடி, மற்றும் ஏமாற்றுதல் ஆகிய குற்றத்துக்காக வழக்கு பதிவு செய்யப்பட்டு,
கைது வாரண்டும் பிறப்பிக்கப்படுகிறது. சங்கீதா இந்தியாவுக்குள்
நுழைந்தால் உடனடியாக கைது செய்யப்படுவார். இந்த சூழலில்தான் சங்கீதா
அளித்த புகாரின் பேரில், விசா மோசடி, பணியாட்களுக்கு பேசிய படி ஊதியம்
வழங்காமை ஆகிய குற்றங்களுக்காக சங்கீதாவை கைது செய்கிறது அமெரிக்க
காவல்துறை.
செப்டம்பர் மாதத்தில் சங்கீதா ரிச்சர்டோடு, தேவயானி செய்து கொண்ட
ஒப்பந்தத்தின்படி, ஒரு மாதத்துக்கு 30 ஆயிரம் ரூபாய் தருவதாக கூறுகிறார்
தேவயானி. சங்கீதாவுக்கு விசா பெறுவதற்காக, அமெரிக்க தூதரகத்திடம்
விண்ணப்பிக்கிறார் தேவயானி.
இது தொடர்பாக அமெரிக்க தூதரகத்தில் நேர்முகத் தேர்வு நடக்கையில்,
என்னென்ன கேட்பார்கள், என்னென்னா சொல்ல வேண்டும் என்பதை சங்கீதாவுக்கு
சொல்லிக் கொடுக்கிறார் தேவயானி. அதன்படி, ஒரு மணி நேரத்துக்கு 9.75 டாலர்
தரப்படுகிறது என்றும், வாரத்துக்கு 40 மணி நேரம் மட்டுமே வேலை என்றும், ஒரு
நாளில் காலை 7 மணி முதல் மதியம் 12.30 மணி வரையிலும், அதன் பிறகு, மாலை
6.30 முதல் இரவு 8.30 மணி வரை மட்டுமே வேலை என்றும் கூற வேண்டும் என்றும்,
மாதம் 30 ஆயிரம் வழங்கப்படுவது குறித்து எதுவும் சொல்லக் கூடாது என்றும்
சொல்லித் தருகிறார்.
தேவயானி மீதான குற்றச்சாட்டுக்கள்
சங்கீதா தூதரகத்துக்கு நேர்முகத் தேர்வுக்காக செல்கையில், 22 நவம்பர்
2012 அன்று ஒரு புதிய ஒப்பந்தத்தை சங்கீதாவோடு செய்து கொள்கிறார் தேவயானி.
அந்த ஒப்பந்தத்தில் சங்கீதாவின் கணவர் சாட்சியாக கையெழுத்திடுகிறார்.
அதில், அமெரிக்க சட்டதிட்டங்களின் படி, சங்கீதா வேலைக்கு
நியமிக்கப்பட்டுள்ளார் என்றும், அமெரிக்க விதிகளின்படி, ஊதியங்கள்
வழங்கப்படும் என்றும், தேவயானி ஒப்புக் கொண்டு கையெழுத்திடுகிறார். அந்தக்
குற்றச்சாட்டுகளுக்காகத்தான், தற்போது தேவயானி கைது
செய்யப்பட்டிருக்கிறார்.
தேவயானியின் தந்தை ஒரு ஐஏஎஸ் அதிகாரி. மிகப்பெரிய ஊழல் பேர்விழி.
மும்பைனின் பெஸ்ட் போக்குவரத்துக் கழகத்தின் மேலாண் இயக்குநராக இருந்தபோது,
சீனாவைச் சேர்ந்த கிங் லாங் என்ற நிறுவனத்தின் ஏ.சி பேருந்துகளை
வாங்கினார். நாளடைவில் அந்த பேருந்துகள் அடிக்கடி பழுதாகின. சாலைகளில்
ஆங்காங்கே ஓரங்கட்டப்பட்டன. பின்னாளில் விசாரணையில், அந்த பேருந்துகள்
கிங் லாங் பேருந்துகளே அல்ல என்பது தெரிய வந்தது. இணைப்பு.
ஆதர்ஷ் வீட்டு வசதி ஊழலில் தேவயானி மற்றும் அவரது தந்தை உத்தம் கோப்ராக்டே
ஆகியோர், அரசு ஒதுக்கீட்டின் கீழ் சட்டவிரோதமாக ஃப்ளாட் ஒதுக்கீடு
பெற்றிருப்பது தெரிய வந்தது. சமீபத்தில் வெளியான ஆதர்ஷ் ஊழல் தொடர்பான
விசாரணை ஆணையத்தின் அறிக்கையில், ஆண்டுக்கு 1.8 லட்சம் ஊதியம் என்று
தெரிவித்துள்ள தேவயானி, 1.10 கோடி பணத்தை ஆதர்ஷ் வீட்டுக்காக
செலுத்தியிருப்பது தெரிய வந்துள்ளது. இதற்கான பணம் எங்கிருந்து வந்தது
என்று விசாரணை ஆணையம் கேட்டதற்கு, பதில் சொல்லாமல் தவிர்த்திருக்கிறார்
தேவயானி. இணைப்பு
நியாயப்படி தேவயானி மீது மத்திய அரசு வருமானத்துக்கு அதிகமாக சொத்து
சேர்த்த வழக்கை பதிவு செய்ய வேண்டும். இப்படிப்பட்ட நேர்மையாளர்கள்தான்,
இன்று ஒரு வேளையாளுக்கு உரிய ஊதியம் வழங்காத குற்றத்துக்காக கைது
செய்யப்பட்டதற்கு குய்யோ முறையோ என்று கூப்பாடு போடுகிறார்கள்.
வீட்டில் வேலை செய்யும் பணியாட்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்க
வேண்டும் என்பது போன்ற சட்டங்கள் இந்தியாவில் இல்லாமல் இருக்கலாம். ஆனால்,
அமெரிக்காவில் இந்த சட்டங்கள் கடுமையாக அமல்படுத்தப்பட்டு வருகின்றன.
அப்படியென்ன குற்றத்தை செய்து விட்டார் தேவயானி என்று கேட்பதே, ஒரு
பணியாளரின் வயிற்றில் அடிப்பது இவர்களுக்கெல்லாம் விஷயமாகவே இல்ல, அன்றாட
தொழிலாக இருந்து வருகிறது என்பதையே காட்டுகிறது. இந்தியாவில் இதை நாம்
அன்றாடம் செய்து வருகிறோம்... இதைப் போய் பெரிதுபடுத்துகிறார்களே என்று
நினைக்கிறார்கள் போலும்.
இந்திரா காந்தி காலத்துக்குப் பிறகு, இந்தியாவில் ஆளுமை மிக்க தலைவர்கள்
இருந்தது இல்லை. இந்திராவுக்குப் பின் வந்த ராஜீவ் காந்தி, உலக அளவில்
பெரிய தலைவராக உருவாக வேண்டும் என்று விரும்பினார். அப்போது போதுமான
அனுபவம் இல்லாத காரணத்தால், வெளியுறவுத் துறை (ஐஎஃப்எஸ்) அதிகாரிகளை பெரிய
அளவில் சார்ந்து இருக்க நேர்ந்தது. அப்படி அதிகாரிகளோடு சார்ந்து இருந்து
ஏற்பட்ட ஒப்பந்தமும், அதன் பின்விளைவுமே, இந்திய இலங்கை ஒப்பந்தம்.
அதற்குப் பிறகு, முடிவெடுப்பது உள்ளிட்ட முக்கியமான அதிகாரங்கள்
வெளியுறவுத் துறை அதிகாரிகளிடம் குவிந்தது. பிஜேபி ஆட்சிக்கு வந்தவுடன்,
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் என்ற புதிய பதவி உருவாக்கப்பட்டு,
வெளியுறவுத்துறை மற்றும் உள்துறை ஆகிய துறைச் செயலர்களுக்கு மேலான பதவியாக
அது உருவாக்கப்பட்டது. வாஜ்பாய் காலத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக,
பிரஜேஷ் மிஷ்ரா நியமிக்கப்பட்டார். அதன் பின், காங்கிரஸ் அரசு
பதவியேற்றதும், எம்.கே.நாராயணன் நியமிக்கப்பட்டார். எம்.கே.நாராயணன்,
மத்திய உளவுத்துறையில் பழம் தின்று கொட்டை போட்டதால், உள்துறையோடு சேர்ந்து
வெளியுறவுத்துறையையும் தன் கையில் வைத்திருந்தார்.
வெளியுறவுத்துறை அதிகாரிகளின் ஆதிக்கம் உச்சத்துக்கு சென்றது,
ஈழப்போரின்போது. அரசியல் ரீதியாக இலங்கைக்கு நெருக்கடி தருவது,
இந்தியாவுக்கு சாதகமாக இருக்கும் என்ற அடிப்படை அறிவு கூட இல்லாமல்,
அதிகாரிகளின் ஆலோசனையால், இலங்கைக்கு ஆயுத உதவி செய்வது வரை, இந்தியா
கொள்கை முடிவு எடுத்தது. எம்.ஜி.ஆர், இந்திரா காந்தி போன்ற தலைவர்கள்
இருந்திருந்தால், இந்த அதிகாரிகள் இந்த அளவுக்கு வெளியுறவுக் கொள்கையில்
ஆதிக்கம் செலுத்த முடிந்திருக்காது. ஆனால் தற்போது வெளியுறவுக் கொள்கை
முழுமையாக அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் சென்றிருப்பதையே தேவயானி
விவகாரத்தில் இந்திய அரசின் செயல்பாடுகள் நிரூபிக்கின்றன.
இந்திய அரசின் செயல்பாடுகள் நிரூபிக்கின்றன.
இத்தனை நாட்கள் இருந்த பிரதமர்களிலேயே அமெரிக்காவுக்கான விசுவாசமான
அடிமை மன்மோகன் சிங் மட்டுமே. அமெரிக்காவோடு அணு சக்தி ஒப்பந்தம் செய்து
ஆக வேண்டும் என்பதற்காக தனக்கு ஆதரவளித்து வந்த இடது சாரிகளின் ஆதரவு
விலக்கிக் கொள்ளப்பட்டும், அரசே கவிழ்ந்தால் கூட அணு சக்தி ஒப்பந்தம்தான்
முக்கியம் என்று முடிவெடுத்தவர் மன்மோகன் சிங். அமெரிக்காவுக்கும்
மன்மோகன்சிங்குக்கும் உள்ள உறவை எளிமையாக விளக்க வேண்டும் என்றால்,
ஜெயலலிதாவுக்கும், அதிமுக அமைச்சர்களுக்குமான உறவு அது. அப்படிப்பட்ட
மன்மோகன் சிங், டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரக வாயிலில் உள்ள தடைகளை நீக்க
சம்மதிக்கிறார், விமான நிலையத்தில் அமெரிக்க அதிகாரிகளுக்கு
வழங்கப்பட்டிருந்த சிறப்பு பாஸ்களை ரத்து செய்ய சம்மதிக்கிறார், அமெரிக்க
அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டிருந்த உணவு உள்ளிட்ட இறக்குமதிக்கான சிறப்பு
அனுமதியை ரத்து செய்கிறார் என்றால், அதிகாரிகளின் செல்வாக்கு என்னவென்று
புரிகிறதா ?
இந்த அதிகாரிகள் தற்போது குய்யோ முறையோ என்று குதிப்பதற்கான காரணம்
என்னவென்று தெரியுமா ? நான் என் வீட்டு வேலையாளுக்கு சம்பளம் கொடுப்பேன்,
கொடுக்க மாட்டேன், அவளை அடிப்பேன், உதைப்பேன், உணவு வழங்காமல்
துன்புறுத்துவேன்.... ஆனால், இதை விசாரிக்க இந்தியா மற்றும் இந்திய
நீதிமன்றத்திடம் மட்டுமே அதிகாரம் உள்ளது. ஏனென்றால், இந்த
அதிகாரிகளுக்கு, இந்திய காவல்துறை மற்றும் நீதித்துறையின் மீது அவ்வளவு
நம்பிக்கை. அமெரிக்க அரசு நடவடிக்கை எடுத்தால் எங்கே தண்டிக்கப்பட்டு
விடுவோமோ.... நியாயப்படி விசாரணை நடக்குமோ என்பதனால்தான், இந்தியாவுக்கும்
அமெரிக்காவுக்கும் இடையே போர் மூண்டது போல குதித்துக்
கொண்டிருக்கிறார்கள்.
தேவயானி கோப்ராகடே 1999ம் ஆண்டு பணியில் சேர்ந்தவர். ஒரு அரசு
அதிகாரிக்கு, அவர் வெளியுறவுத் துறை அதிகாரியாக இருந்தாலும், மாதத்துக்கு
60 முதல் 80 ஆயிரம் வரை ஊதியம் வரும் என்று வைத்துக் கொள்ளலாம்.
தேவயானியின் சொத்துப் பட்டியலை பாருங்கள்.
தேவயானியும் அவர் தந்தையும் சொத்துக்களை வாங்கிக் குவிப்பதை மட்டுமே
தொழிலாக செய்து வந்திருக்கின்றனர். இவ்வளவு சொத்துக்களை வைத்துக் கொண்டு,
பணிப்பெண்ணுக்கு கப்பித்தனமாக ஊதியம் கொடுத்த தேவயானிக்கு கைவிலங்கிட்டதில்
என்ன தவறு ?
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக