பிரதம நீதியரசர் கலாநிதி
ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிரான குற்றப்பிரேரணை விசாரணை முறைமையைக்
கண்டித்தும், நீதித்துறையின் சுயாதீனம் பாதுகாக்கப்பட வேண்டுமென
வலியுறுத்தியும் நாடு முழுவதும் நீதித்துறையினர் இன்று போராட்டத்தில்
குதிக்கவுள்ளனர்.
அதேவேளை, பிரதம நீதியரசருக்கு ஆதரவு
தெரிவிக்கும் வகையில் வடக்கு சட்டத்தரணிகள் நேற்றுமுதல்
பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருவதால் நீதிமன்ற நடவடிக்கைகள் யாவும்
முடங்கியுள்ளன. இன்றும் அந்தப் போராட்டம் தொடரும்.
இந்தப் பணிப்புறக்கணிப்புப் போராட்டம்
எதிர்வரும் வெள்ளிக் கிழமைவரை தொடரவுள்ளதால் வடமாகாணத்திலுள்ள
நீதிமன்றங்களின் வழக்கு விசாரணைகள் பிறிதொரு திகதிக்கு
ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
நாடு முழுவதிலும் இன்று காலை 9 மணிமுதல்
10 மணிவரை சட்டத்தரணிகள் பணிப் புறக்கணிப்பை மேற்கொள்ளும் அதேவேளை,
கொழும்பு நீதிவான் நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றம் ஆகியவற்றின்
நீதிபதிகள் முழுநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் இன்று ஈடுபடுகின்றனர்.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின்
முக்கிய கூட்டமொன்று புதுக்கடையிலுள்ள அதன் அலுவலகத்தில் நேற்று அவசரமாக
நடந்தது. இது விடயம் தொடர்பில் ஆராய்ந்தது. இதன்போதே ஒரு மணித்தியாலம்
பணிப் புறக்கணிப்பில் ஈடுபட முடிவெடுக்கப்பட்டது.
நாட்டின் சகல பாகங்களிலுமுள்ள
நீதிபதிகளும் இன்று எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடுவர் எனக் கூறப்பட்டாலும்
அது உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
பிரதம நீதியரசர் கலாநிதி ஷிராணி
பண்டாரநாயக்கவுக்கு எதிராக குற்றப்பிரேரணையை விசாரிப்பதற்கு நியமிக்கப்பட்ட
நாடாளுமன்றத் தெரிவுக்குழு கடந்த சனிக்கிழமை நாடாளுமன்றில் தமது விசாரணை
அறிக்கையை சபாநாயகரிடம் கையளித்தது.
பிரதம நீதியரசருக்கு எதிராக
முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளில் விசாரிக்கப்பட்ட ஐந்தில் மூன்று
குற்றச்சாட்டுகளில் அவர் குற்றவாளியென நிரூபணமாகியது என்று அரச தரப்பு
தெரிவுக்குழு உறுப்பினர்கள் கடந்த சனிக்கிழமை நாடாளுமன்றக் கட்டடத்
தொகுதியில் விசேட செய்தியாளர் மாநாட்டை நடத்தி அறிவித்தனர்.
இந்நிலையில் மேற்படி விசாரணை அறிக்கையை
ஏற்கமுடியாது என்றும், அது பக்கச்சார்பான விசாரணை என்றும்
எதிர்க்கட்சியினர் மற்றும் நீதித்துறையினர் குறிப்பிட்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக