பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் இலங்கை காவல்துறையினரால்
கைதுசெய்யப்பட்ட யாழ். பல்கலைக்கழக மாணவர்கள், ஏழுபேர் நேற்று
விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், ஏனைய நான்கு மாணவர்களும் வெலிக்கந்தைக்கு
கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
ஏழு மாணவர்கள் நேற்று விடுவிக்கப்பட்டுள்ள போதிலும், அனைவரும் விடுவிக்கப்பட்டால் தான் தாம் பணிக்குத் திரும்புவோம் என்று யாழ்.பல்கலைக்கழ ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
இலங்கை காவல்துறையின் பயங்கரவாத தடுப்பு பிரிவினால், கைதுசெய்யப்பட்டு வவுனியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 11 மாணவர்களில் 7 பேர் நேற்று விடுதலை செய்யப்பட்டனர்.
மருத்துவபீட மாணவர்களான க.சஞ்சீவன், ச.பிரசன்னா, சி.சசிகாந்த், செ.ஜனகன், ரி.அபராஜிதன் மற்றும், முகாமைத்துவபீட மாணவர் ப.சபேஸ்குமார், விஞ்ஞானபீட மாணவர் செ.ரேணுராஜ் ஆகியோரே விடுவிக்கப்பட்டனர்.
அதேவேளை, யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் வி.பவானந்தன், ஒன்றியச் செயலாளர் ப.தர்சானந்த், கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவர் க.ஜெனமேஜெயந்த், விஞ்ஞானபீட மாணவன் எஸ்.சொலமன் ஆகிய நால்வரும் வெலிக்கந்தை தடுப்பு முகாமுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
நேற்றுக்காலை வவுனியாவுக்குச் சென்ற உறவினர்களிடம், இவர்கள் அங்கு இல்லை என்றும்வெலிக்கந்தைக்கு கொண்டு செல்லப்பட்டுவிட்டதாகவும் இலங்கை காவல்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதற்கிடையே மாணவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டால் தான் தாம் பணிக்குத் திரும்புவோம் என்று யாழ்.பல்கலைக்கழ ஆசிரியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
“மாணவர்கள் கைதுசெய்யப்பட்ட பின்னர், யாழ் பல்கலைக்கழக செயற்பாடுகள் முடங்கிப்போயுள்ளன. அனைத்து மாணவர்களும் விடுதலை செய்யப்படாத வரை இந்தநிலை தொடரக்கூடும்.” என்று ஆசிரியர் சங்க தலைவர் ஆர். விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக