அச்செழு இராணுவமுகாம் மூடப்பட்டு முகாம் இருந்த பிரதேசம் மற்றும்
முகாம் பகுதியில் உள்ளடங்கியிருந்த சொத்துக்கள் பிரதேச சிவில் அதிகாரிகளின்
ஊடாக பொதுமக்களிடம் கையளிக்கும் உத்தியோக பூர்வ நிகழ்வு நாளை 2ஆம் திகதி
வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ளது.
வலி.கிழக்குப் பிரதேச செயலர் பிரிவில் பாதுகாப்பான பெரிய
இராணுவமுகாமாகவும் பாதுகாப்புத்தரப்பினரின் சிவில் நிர்வாக மத்திய
இடமாகவும் அச்செழு இராணுவமுகாம் செயற்பட்டு வந்தது. இது சந்தேக நபர்களின்
விசாரணை மையமாகவும் காணப்பட்டது.
நீர்வேலி மாசிவன் சந்தியில் இருந்து மேற்கு நோக்கி
புன்னாலைக்கட்டுவனுக்கு செல்லும் வீதியில் வீதிக்குக் குறுக்காக தெற்கு
பக்கமாகவும் வடக்குப் பக்கமாகவும் 250 ஏக்கர் நிலப்பரப்பு அளவில் 80இற்கு
மேற்பட்ட குடியிருப்புக்களையும் பயிர்ச்செய்கை நிலங்களையும் உள்ளடக்கியதாக
இவ் இராணுவ முகாம் அமைக்கப்பட்டிருந்தது.
அச்செழு இராணுவமுகாமை மூடுவது என்ற பாதுகாப்புத் தரப்பின் தீர்மானத்தை
அடுத்து, முகாமில் பயன்படுத்தப்பட்டு வந்த தளபாடங்கள் மற்றும் உபகரணங்கள்
கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக ஏற்றி அகற்றப்பட்டு வருகின்றன. இவை வலி.வடக்கு
பிரதேச செயலர் பிரிவில் உள்ள இடம் ஒன்றுக்கு கொண்டு செல்லப்படுகின்றது.
முகாம் பிரதேசம் மீண்டும் கையளிக்கப்படுவதை அடுத்து காவல் அரண்கள்,
மண் அணை அகற்றப்பட்டு துப்புரவு செய்யப்பட்டிருப்பதோடு மக்கள்
பயன்பாட்டிற்கு இதுவரை காலமும் அனுமதிக்கப்படாமல் தடைசெய்யப்பட்டிருந்த
மூன்று உள்ளூர் வீதிகளும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து
விடப்பட்டுள்ளன.
அச்செழு இராணுவமுகாமிற்குள் உள்ளடக்கப்பட்டிருந்த பொதுமக்களின்
குடியிருப்புக்கள் மற்றும் பயிர்ச்செய்கை நிலங்கள் கையளிக்கப்படவுள்ளதை
அடுத்து 17 வருடங்களின் பின் குறித்த பிரதேசத்தில் நடமாடவிருப்பது குறித்து
பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.
Thanks. THIS'S MY VILLAGE.
பதிலளிநீக்கு