நாம்
ஆயுதம் தூக்க வேண்டுமா என்பதை எங்களை எதிர்ப்பவர்களே அதனைத் தீர்மானிக்க
வேண்டும். அமைதிவழியில் போனவர்களைச் செல்லவிடாது அடிதடிகளைப் பிரயோகித்து
மாணவர்களின் ஆவேசத்தைத் தூண்டி இருக்கிறார்கள்.இவ்வாறு தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஜெ.ஜெனார்த்தனன்.
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலைக் கண்டித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
இலங்கைத் தீவில் சிறு பான்மையினத்தின் மீதான அடக்குமுறை காட்டப்படுவதை மீண்டுமொருமுறை சர்வதேசத்துக்கு அரசானது மெய்ப்பித்துக்காட்டியுள்ளது. இளைஞர்களின் சக்தியென்பது பலம்மிக்கது. அதனை அழிக்க நினைப்பது அல்லது ஒடுக்க நினைப்பது பொல்லைக் கொடுத்து அடி வாங்குவதுக்கு ஒத்தது.
இலங்கை வரலாற்றைப் புரட்டிப்போட்ட போர் வெடிக்க பல்கலைக்கழகங்களுக்கான தமிழ் மாணவர்களின் அனுமதி தொடர்பான பிரச்சினையே சிறு தீப்பொறியாக இருந்ததென்பதை மறந்து விடவேண்டாம்.
யாழ். பல்லைக்கழகத்தில் தமிழ் சிங்கள மாணவர்கள் இணைந்து கல்வி பயில்கின்றனர். இதனால் அவர்களுக்கடையில் மனக்கசப்புகள் ஏற்பட வாய்ப்புக்கள் உள்ளன. மாணவர்களுக்கிடையில் ஒற்றுமையைக் கட்டியெழுப்பவேண்டிய அரசே அவர்களுக்கிடையில் மோதல்களை உருவாக்கக் களம் அமைக்கிறது.
மாணவர்களிடையே ஏற்படும் சிறு பிரச்சினைகளைக் கூட இனரீதியான வன்முறைகளாக உருமாற்றுவதற்கு சில உள்ளார்ந்த சக்திகள் முயற்சிக்கின்றன.
அண்மையில் கிழக்குப் பல்கலைக்கழக திருமலை வளாகத்தில் மாணவர்களிடையே ஏற்பட்ட சிறிய பிரச்சினையை இனரீதியான முறுகல் நிலையாக அடையாளம் காட்டியிருப்பதும் மாணவர்களிடையே காணப்படும் ஒற்றுமையை குலைப்பதற்கான ஒரு முயற்சியாகவே நாங்கள் கருதுகின்றோம்.
இத்தகைய அடக்குமுறைகள் தொடருமானால் மாணவர்களின் பலம் பற்றி அரசுக்கு தெரியவரும் காலம் தொலைவில் இல்லை. என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக