14.11.2013அன்று சத்தியம் டிவியில் நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சியில்
முள்ளிவாய்க்கால் முற்றம் இடிக்கப்பட்டது தொடர்பாக சில தினங்களுக்கு முன்
விவாதம் நடந்தது. இதில் காங்கிரஸ் கட்சி சார்பில் விஜயதாரணியும், பாஜக
சார்பில் எஸ்.ஆர்.சேகர் என்பவரும் கலந்து கொண்டு முள்ளிவாய்க்கால் முற்றம்
தொடர்பாக கருத்துத் தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சி முடியும் நிலையில்
இறுதியாக ஒருவர் போனில் தொடர்பு கொண்டு தமிழக முதல்வர் ஜெயலலிதாவையும்,
விஜயதாரணியையும் ஆபாசமாக கொச்சை வார்த்தைகளில் திட்டியுள்ளார்.
தமிழ்தாசனின் பேச்சைக் கேட்டு அதிர்ச்சியடைந்தார் விஜயதாரணி. கோபாவேசமாக
அவர் அந்த நபர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்,
முதல்வரையும், தன்னையும், பெண்களையும் இழிவுபடுத்தும் வகையில் பேசிய அந்த
நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பேசினார். மேலும் சத்தியம் டிவி
அந்த நபரைப் பேச அனுமதித்ததற்கும் அவர் கண்டனம் தெரிவித்தார். இந்த
பரபரப்பு நிகழ்ச்சியைத் தொடர்ந்து சத்தியம் டிவி உரிமையாளர்கள் மோகன் சி
லாசரஸ் உள்ளிட்டோரின் வீடுகளுக்கு காவல்துறை அதிகாரிகள் விரைந்து சென்று
விசாரணை நடத்தினர். மேலும் தமிழ்தாசன் மீது போலீஸார் வழக்கும் பதிவு
செய்தனர். அவரது தொலைபேசி எண்ணை வைத்து அவரை அடையாளம் காணும் பணி முடுக்கி
விடப்பட்டது. அதில் அவர் ராமநாதபுரத்திலிருந்து பேசியது தெரிய வந்தது.
இதையடுத்து ராமநாதபுரம் விரைந்த போலீஸார் தமிழ்தாசனைக் கைது செய்தனர்.
இவரது சொந்த ஊர் தஞ்சாவூராகும். அவர் மீது தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின்
கீ்ழ் வழக்குப் போடப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து முன்னதாக விளக்கம்
அளித்த சத்தியம் டிவி செய்தி ஆசிரியர் விஜயரங்கம் கூறுகையில்,
சம்பந்தப்பட்ட நபர் தன்னை தமிழ் ஆர்வலர் என்றும், மதிமுகவைச் சேர்ந்தவர்
என்றும், தஞ்சாவூரைச் சேர்ந்தவர் என்றும் அறிமுகப்படுத்திக் கொண்டு
பேசினார். ஆரம்பத்தில் நன்றாகத்தான் பேசினார். எனவே அவரது அழைப்பை லைவாக
ஒலிபரப்பினோம். ஆனால் பின்னர் அவர் மோசமாக பேசத் தொடங்கியதால் அவரது
அழைப்பை துண்டித்து விட்டோம் என்றார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக