விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வீரம் செறிந்த
விடுதலைப் போராட்டமே தமிழினத்தை தலைநிமிர வைத்துள்ளது என இலங்கை தமிழரசுக்
கட்சியின் வவுனியா மாவட்ட இளைஞர் அணித்தலைவரும் வடமாகாணசபை வேட்பாளருமாகிய
எம்.எம். ரதன் தெரிவித்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபைக்கான தேர்தல் அலுவலகத்தை வீரபுரத்தில் திறந்து வைத்து உரையாற்றுகையில் தெரிவித்தார்.
இந்நிகழ்விற்கு செட்டிகுளம் பிரதேசசபையின்
உப தலைவர் எஸ். சந்திரன் தலைமை தாங்கினார். இந்நிகழ்வில் அலுவலகத்தினை
வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் நாடாவை வெட்டி
திறந்து வைத்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
1948ம் ஆண்டு ஸ்ரீலங்கா தேசத்திற்கு
சுதந்திரம் கிடைத்தது ஆனால் நாம் எமது மண்ணில் சுதந்திரக்காற்றை இன்னும்
சுவாசிக்கவில்லை கடந்த அறுபது வருடகால எமது போராட்டத்தில் அண்ணன் பிரபாகரன்
நடாத்திய வீரம் செறிந்த போராட்டமே தமிழினத்தை தலைநிமிர வைத்தது என்றால்
அது மிகையாகாது.
எமது தாயகத்தின் விடுதலைக்காக தந்தை
செல்வா அகிம்சை ரீதியாக முப்பதுவருடம் போராடினார் அதனை காலத்துக்குகாலம்
ஆட்சிப்பீடம் ஏறிய சிங்கள தேசத்தின் தலைமைகள் ஏற்றுக்கொள்ளவில்லை.
சத்தியாக்கிரக போராட்டத்தினைக்கூட அவர்கள் கருத்தில்கொள்ளவில்லை.
இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் 1972ஆம்
ஆண்டு இளைஞனாக இருந்தபோது எமது இனத்திற்கு எதிரான அநீதிகளை கண்டு அண்ணன்
பிரபாகரன் ஆயுத வழியிலான போராட்டத்தினை ஆரம்பித்தார்.
அந்த போராட்டத்தின் ஊடாக தரையிலும்,
கடலிலும், வானிலும் என எமது போராளிகள் நிகழ்த்திய வீரம் செறிந்த
தாக்குதல்களால் சிறிலங்கா படைகள் சின்னபின்னமானத்தை யாரும் மறுக்கமுடியாது.
அந்த போராட்டமே தமிழர்களின் முகவரியான
போராட்டம்,சர்வதேச அரங்கில் பெற்றிருக்கும் வரலாற்று முக்கியத்துவம்
வாய்ந்த போராட்டம் என்பதை வரலாற்றின் ஊடாக நாம் காண்கின்றோம்.
அந்த விடுதலை போராட்டத்திலேதான் ஆயிரம்
ஆயிரம் வீரமறவர்கள் தமது இன்னுயிர்களை இந்த மண்ணில் அர்ப்பணம் செய்தார்கள்.
அவர்களின் தியாகங்கள் இந்த மண்ணிலே என்றும் வீண்போகாது என்ற
அடிப்படையில்தான் நாம் இன்றும் ஜனநாயக வழியில் போராடுகின்றோம். தொடர்ந்தும்
நாம் போராடுவோம் என்பதை இத்தேர்தலினூடாக நிரூபிப்போம் என்றார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக