தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் விருப்பத்தை ஏற்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனுக்கு ஜனாதிபதி பதவிப்பிரமாணம் செய்து வைத்தமையானது அரசாங்கம் செய்த
மிகச் சிறந்ததொரு அரசியல் நடவடிக்கையாகும். வடக்கு மக்களின்
உணர்வுகளைப் புரிந்து அரசாங்கம் செயற்படுமானால் அதை நாம்
வரவேற்கின்றோம் என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் மத்திய மாகாண
சபை உறுப்பினருமான அஸாத் சாலி தெரிவித்துள்ளார்.
விக்கினேஸ்வரனும் சம்பந்தனும் ஜனாதிபதி விரித்த வலையில்
விழுந்துவிட்டார்கள் என பிரிவினைவாதிகள் நினைத்தால் அது அவர்களின்
முட்டாள்தனமாகும் எனவும் அவர் தெரிவித்தார்.
இது தொடர்பாக அஸாத் சாலி தொடர்ந் தும் தெரிவிக்கையில்,
சி.வி.விக்கினேஸ்வரன் ஜனாதிபதி மஹிந் தராஜபக் ஷ முன்னிலையில்
பதவிப் பிரமாணம் செய்தமையானது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்
ஜனநாயக செயற்பாட்டினை வெளிப்படுத்துகின்றது. அதேபோல் அரசாங்கம்
இந்த கால கட்டங்களில் செய்த மிகச்சிறந்த அரசியல் செயற்பாடாகும்.
அதேபோன்று வடக்கு மக்களின் பிரச்சினைகளை இனங்கண்டு அவர்களின்
உணர்வுகளைப் புரிந்து அரசாங்கம் செயற்பட வேண்டும். தமிழ்த் தேசியக்
கூட்டமைப்பின் செயற்பாடுகளுக்கு அரசாங்கம் இடமளித்து வடக்கு
மக்களின் உரிமைகளை அங்கீகரித்து தடைகளின்றி அவர்களை செயற்பட விட்டால்
அதை அனைவரும் வரவேற்பார்கள்.
மேலும், விக்கினேஸ்வரன் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம்
செய்தமை ஜனாதிபதியின் வலையில் விக்னேஸ்வரனும் சம்பந்தனும்
விழுந்துவிட்டதாக பலர் நினைத்து விமர்சிக்கின்றனர்.குறிப்பாக அரச
ஊடகங்களும் பிரிவினைவாதக் கட்சிகளும் விமர்சிக்கின்றன. ஆனால் இச்
செயற்பாடானது அரசியல் புரிந்துணர்வையும் தேசிய நல்லிணக்கத்தையும்
நோக்கியதான மிகச் சரியானதொரு நகர்வென்பதே உண்மை.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடபகுதி மக்களுக்காக அரசுடன்
இணக்கப்பாட்டுடன் செயற்பட முன்வந்துள்ளதைப் போன்று அரசாங்கமும்
கூட்டமைப்புடன் இணைந்து புரிந்துணர்வு, விட்டுக் கொடுப்புடன் வடக்கு
வாழ் மக்களின் வாழ்க்கைக்காக அவர்களை சூழ்ந்துள்ள இருளை துடைத்தெறிய
முன்வர வேண்டும்.
அதேபோன்று இன்று அமைச்சர்களின் பாதுகாவலர்களும்
இணைப்பாளர்களும் கடத்தப்படும் நிலைக்கு நாட்டின் சட்டமும்
பாதுகாப்பும் சீர் குலைந்துள்ளன. நாட்டில் பொலிஸ் பாதுகாப்பு இருந்தும்
அவற்றில் எந்தப் பிரயோசனமும் இல்லை என்ற நிலைமையே இன்று காணப்படுகின்றது.
இதனால்தான் சுயாதீன பொலிஸ் ஆணைக் குழு மற்றும் 17 ஆவது சீர்திருத்தம் என்ப
வற்றை முழுமையாக செயற்படுத்த வேண்டும் என்பதை நாம் தொடர்ந்தும் வலியுறுத்தி
வருகின்றோம் எனவும் அவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக