சிந்தனைத்துளிகள்....

எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால்
இலச்சியவாதிகளான நாம்
சரியாக இருக்கிறோம் என்பதற்கான
அடையாளம் அது !

“ஜென்னி மார்க்ஸ்”

19 பிப்ரவரி, 2013

தேசியத்தலைவர் வே. பிரபாகரனின் கடைசி மகன் பாலச்சந்திரன் சிறிலங்காப் படைகளால் படுகொலை; உறுதி செய்யும் ஒளிப்படங்கள்



newsவிடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் கடைசி மகன் பாலச்சந்திரன், சிறிலங்கா படையினரால்  உயிருடன் பிடிக்கப்பட்டு பதுங்குகுழி ஒன்றில் தடுத்து வைக்கப்பட்ட பின்னரே சுட்டுக்கொல்லப்பட்டதற்கான ஆதாரங்களை வெளிப்படுத்தும் புதிய ஒளிப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
இந்த ஒளிப்படங்களை பிரித்தானியாவின் ‘தி இன்டிபென்டென்ட்‘ நாளேடு மற்றும் இந்தியாவின் ‘தி இந்து‘ நாளேடு என்பன வெளியிட்டுள்ளன. 
 
‘சனல் 4‘ தொலைக்காட்சிக்கு கிடைத்த இந்த ஒளிப்படங்களை, ‘சிறிலங்காவின் கொலைக்களங்கள்‘ காணொலி ஆவணப்படங்களை இயக்கிய கல்லும் மக்ரே, இந்த ஊடகங்களுக்கு வழங்கியுள்ளார். 
 
ஒரே ஒளிப்படக்கருவியால், சில மணிநேரங்களுக்குள் எடுக்கப்பட்ட பல படங்களில், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் 12 வயதான கடைசி மகன் பாலச்சந்திரன், சிறிலங்கா படைகளின் காவலில் பதுங்குகுழி ஒன்றில் உயிருடன் அமர்ந்திருக்கும் காட்சியும், சில மணி நேரங்களின் பின்னர், அவர் நெஞ்சில் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்து கிடக்கும் காட்சிகளும் பதிவாகியுள்ளன. 
 
இந்த ஒளிப்படங்கள் 2009 மே மாதம், விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் இறுதிக்கட்டத்தில் எடுக்கப்பட்டவை. 
 
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின மகன் பாலச்சந்திரன், மோதலில் அகப்பட்டே கொல்லப்பட்டதாக, சிறிலங்கா அதிகாரிகள் கூறிவந்துள்ளனர். 
 
ஆனால், ஜெனிவாவில் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் தரையிடப்படவுள்ள, ‘போர் தவிர்ப்பு வலயம்‘ ஆவணப்படத்துக்கு கிடைத்துள்ள புதிய ஒளிப்படங்கள், பாலச்சந்திரன், உயிருடன் பிடித்து வைக்கப்பட்டு, பின்னர் கொல்லப்பட்டதற்கான ஆதாரங்களை வெளிப்படுத்துகின்றன. 
 
இறுதியாக எடுக்கப்பட்ட ஒளிப்படத்தை ஆராய்ந்த தடயவியல் நிபுணர்கள், பாலச்சந்திரன் நெஞ்சில் ஐந்து தடவைகள் சுடப்பட்டுள்ளதாகவும், அந்தக் காயங்களைச் சுற்றி எரிகாயம் உள்ளதால் அவர் மிக நெருக்கமாக வைத்தே சுடப்பட்டுள்ளார் என்பதையும் உறுதிப்படுத்தியுள்ளனர். 
 
“சுடப்பட்ட துப்பாக்கியின் குழல் வாய், பாலச்சந்திரன் நெஞ்சுக்கு மூன்று அடி அல்லது அதற்குக் குறைவான தூரத்திலேயே இருந்துள்ளது. 
 
முதலாவது ரவை சுடப்பட்ட பின்னர், பின்புறமாக சாய்ந்து விழுந்த சிறுவன் மீது நான்கு தடவைகள் நெஞ்சில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. 
 
அவர் கண்களோ, கைகளோ கட்டப்பட்டிருந்த நிலையில் சுடப்பட்டதற்கான தடயங்கள் இல்லை. 
 
ஆனால், அவரது மெய்க்காவலர்கள் கண் முன்பாகவே இந்தப் படுகொலை நிறைவேற்றப்பட்டிருக்கலாம்” என்று தடயவியல் ஆய்வு நிபுணர் பேராசிரியர் டெரிக் பவுண்டர் தெரிவித்துள்ளார். 
“புதிய ஒளிப்படங்கள் மிகமுக்கியமான ஆதாரங்கள். 
 
ஏனென்றால், பாலச்சந்திரன் மோதலில் அகப்பட்டே மரணமானதாக சிறிலங்கா அரசாங்கம் கூறுவதை நிராகரிப்பதற்கான ஆதாரம் அது. 
 
அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதையும், அவருக்கு சாப்பிட நொறுக்குத்தீனி கொடுக்கப்பட்டுள்ளதையும், இரத்தத்தை உறைய வைக்கும் வகையில் படுகொலை செய்யப்பட்டுள்ளதையும் காட்டும் ஒளிப்படங்கள் இவை.” என்று கூறியுள்ளார் கல்லும் மக்ரே. 
 
சிறிலங்கா அரச தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் சடலத்தில், தலையின் முன்பக்கத்தில் ஒருபகுதியைக் காணவில்லை. 
 
அவரும் மிகநெருக்கமாக இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டிலேயே கொல்லப்பட்டிருக்கலாம் என்று கருதப்பட்டது. 
 
எனினும், சரணடைய முயற்சிக்கும்போது எவருமே கொல்லப்படவில்லை என்று சிறிலங்கா அரசாங்கம் கூறிவந்தது. 
 
இது குறித்து சிறிலங்கா இராணுவப் பேச்சாளரிடம் ‘தி இன்டிபென்டென்ட்‘ நாளேடு கேள்வி எழுப்பியதற்கு, “இவை பொய்கள், பாதி உண்மைகள்,வதந்திகள், ஊகங்கள்” என்று பதிலளித்துள்ளார். 
 
அதேவேளை, இந்த ஒளிப்படங்கள், சிறிலங்காவில் நடக்கவுள்ள கொமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்பதா இல்லையா என்ற அறிவிப்பை வெளியிடுவதற்கு, பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரோனுக்கு மேலதிக அழுத்தங்களைக் கொடுத்துள்ளதாக ‘தி இன்டிபென்டிடென்ட்‘ குறிப்பிட்டுள்ளது.
 
 
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக